டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் நடைபெற்ற பொங்கல் வழிபாட்டைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். 
தமிழகம்

ஜெயலலிதா கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு: 7,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் அவரது 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா பேரவை சார்பில் 501 புதிய பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும், ஜெயலலிதாவின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 7,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா சிலைக்கு அமைச்சர் ஆர்.பி. உதய குமார், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, வெற்றிவேல், அன்பழகன், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில் தமிழக அரசின் நிதி மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. அதே போல் கடன் சுமையும் கட்டுக்குள் உள்ளது. கரோனா ஊரடங்கின்போது மொத்தம் ரூ.4,500 உதவித் தொகை வழங்கப்பட்டது. தனது செயல்பாட்டால் முதல்வர் பழனிசாமி மக்களின் மனதில் நம்பிக்கையும், செல்வாக்கும் உடையவராக மாறி விட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசைப் பாராட்ட வேண்டாம். ஆனால், கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் என்று பேசினார்.

SCROLL FOR NEXT