தமிழகம்

பாகுபாடின்றி சேவை செய்வேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பார்வையற்ற மாணவி பேட்டி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

"என்னைப்போல பார்வை இல்லாதவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பாகுபாடில்லாமல் சேவை செய்வேன்" என்றார், ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின்

ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மாணவி என்.எல்.பினோ ஜெபின் (23). பிறவியிலேயே பார்வையற்றவர். முதல் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்த பினோ, 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்லி முறையில் படித்து தேர்வு எழுதியுள்ளார்.

சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் 2, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), லயோலாவில் எம்.ஏ. முடித்தார். தற்போது ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தந்தை லூக் அந்தோணி சார்லஸ் ரயில்வே ஊழியர், தாய் மேரி பத்மஜா.

தனது வெற்றி குறித்து பினோ கூறும்போது, "கடினமாக உழைத்தேன். இறைவன் அருளால் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். என்னைப்போல பார்வை இல்லாதவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பாகுபாடில்லாமல் சேவை செய்வேன்" என்றார்.

சங்கர் அகாடெமி, கணேஷின் அகாடமி, சத்யா அகாடெமி மற்றும் அனைத்திந்திய சிவில் சர்வீசஸ் கோச்சிங் சென்டர் முதலான பயிற்சி நிறுவனங்கள் பினோவுக்கு உறுதுணைபுரிந்தன.

"நேர்காணலில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்த மனிதநேயம் இலவச பயிற்சி மையம் எனக்கு மிகவும் துணைபுரிந்தது" என்றார் பினோ.

SCROLL FOR NEXT