காரைக்கால் மாவட்டம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி திமுக எம்எல்ஏ, தான் வகித்து வந்த புதுச்சேரி மின்திறல் குழுமத் (பிபிசிஎல்) தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
நிரவி-திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ கீதா ஆனந்தன், புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்த நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், தான் வகித்து வந்த புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மின்திறல் குழும மேலாண் இயக்குநருமான அர்ஜூன் சர்மாவிடம் இன்று (பிப். 23) நேரில் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதைய ஆட்சியர் உட்பட இதுவரை மேலாண் இயக்குநர்களாக இருந்த அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். மின்திறல் குழுமம் சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது. அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், அரசால் வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்தார்.