தமிழகம்

நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி: புதுச்சேரியில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது; ஆட்சி கவிழ்ந்தது

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக சாடினார்.

பாஜக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாக விமர்சித்தார். முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சடட்ப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

முதல்வர் ஆலோசனை:
சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் தனது அறையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் துணை நிலை ஆளுநரை நேரில் சென்று சந்திப்பார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT