புதுச்சேரியில் புதிதாக 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (பிப். 21) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,273 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 11, காரைக்கால் - 5, மாஹே - 7 பேர் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏனாமில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த 50 வயது பெண் தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 663 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 43 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 45 பேரும் என மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 105 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 87 பேரும் என மொத்தம் 192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 737 (97.84 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 6 லட்சத்து 18 ஆயிரத்து 788 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 693 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும் மருத்துவ பணியாளர்கள் 8,809 பேர்(23 நாட்களில்), முன்களப் பணியாளர்கள் 438 பேர்(12 நாட்களில்) என மொத்தம் 9,247 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.