சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி, என, பலகையில் அமர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி மறுகையில் எழுத்தாணி, தலைக்குப்பின்னால் அறிவொளி என, அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படமே, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் உருவப்படமாகும்.
இந்நிலையில், சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில், திருவள்ளுவர் காவி உடையில் அமர்ந்திருப்பதுபோன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 20) தன் முகநூல் பக்கத்தில், "சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!
பாஜக அரசு அனுமதிக்கிறது; அடிமை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.
ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள திமுக பொறுக்காது.
எச்சரிக்கை!" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2020-ம் ஆண்டு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு, பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அப்படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தமிழகத்தில் திருவள்ளுவர் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசி அவமதிக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்றன. அதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.