சாமிநாதன் 
தமிழகம்

காங்கிரஸிலிருந்து மேலும் 3 எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள்: புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 எம்எல்ஏக்கள் பதவிவிலகுவார்கள். அடுத்து ஆட்சிஅமைக்க கோருவது தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

வருகிற 25-ம் தேதி பாஜக சார்பில் ஏஎப்டி திடலில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், ஒரு அரசு விழாவிலும் பங்கேற்கிறார்.

புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமியின் அதிருப்தியால் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலக தயாராக உள்ளனர். ஏனெனில் காங்கிரஸில் எதிர்காலம் இல்லை என கருதுகின்றனர். பாஜக மிரட்டுவதாக முதல்வர் கூறும் கருத்து தவறு. பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிவிற்கு அவர்களே தான் காரணம். நாராயணசாமி பதவி விலக வேண்டும் என்பது தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் விருப்பமாக உள்ளது. புதுச்சேரி வரலாற்றின் கடைசி காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமி இருப்பார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பில், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரும் இதை உறுதி செய்துள்ளார். கண்டிப்பாக நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம். அதன்பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

நமச்சிவாயம் கருத்து

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “பொதுமக்கள் கூறிய புகாரை தவறாக மொழிபெயர்த்து தங்களது கட்சித் தலைவரை பொதுமக்கள் மத்தியில் முட்டாள் ஆக்க நினைத்தவர் தான் நாராயணசாமி. தற்போது மக்களையும் முட்டாள் ஆக்கி வருகிறார். தன்னுடைய கட்சி எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ள திறமையில்லாத முதல்வர், எதிர்க்கட்சியினர் மீது குறை சொல்லி வருகிறார்.

பல மாநிலங்களில் 356 சட்ட விதிமுறையை பின்பற்றி காங்கிரஸ் தான் ஆட்சியை கலைத்துள்ளது, பாஜக செய்ததில்லை என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT