ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எம்எல்ஏக்கள் சு.ரவி, சம்பத் உள்ளிட்டோர். 
தமிழகம்

நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்: அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

செய்திப்பிரிவு

பெண்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில், 4,368 ஏழை பெண்களுக்கு ரூ.32.29 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது," தமிழகத்தில் ஏழை, எளிய பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து முதல்வர் பழனிசாமி அதை நிறைவேற்றியும் வருகிறார். தமிழக அரசு எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும் அதை பெண்களை மையப்படுத்தியே இருக்கும். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி வருதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்), சம்பத் (சோளிங்கர்), மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபிஇந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT