வேலூர்: அணைக்கட்டு அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (28). இவரது மனைவி யுவராணி(23). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக யுவராணியை 108 ஆம்புலன்ஸில் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். கொட்டாவூர் கிராமம் அருகே செல்லும் வழியிலேயே யுவராணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால், வேறு வழியில்லாமல் மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்தார்.
இதில், குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியிருந்தது. பின்னர், அதிகாலை 2.20 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு தாயும், சேயும் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.