செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி களை தொடர்ந்து, 3 முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தால் அதிருப்தியில் உள்ள திமுக வினர், வரும் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என உடன்பிறப்புகள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
தி.மலை மாவட்டம் செய்யாறுமற்றும் கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. செய்யாறு தொகுதியில் கடந்த 1962 முதல் 2001 வரை நடைபெற்ற 10 தேர்தலிலும் போட்டியிட்டு 7 முறை திமுக வென்றுள்ளது. கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த 1967 முதல் 2001 வரை நடைபெற்ற 9 தேர்தலிலும் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
அதன்பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களிலும் (2006, 2011, 2016) செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகளை கூட்டணி கட்சி களுக்கு திமுக விட்டுக் கொடுத் துள்ளது. இதில், கலசப்பாக்கம் தொகுதியில் எதிர்கட்சியான அதிமுகவே 3 முறையும் வென் றுள்ளது. செய்யாறில் 2006-ல் மட்டும் கூட்டணி கட்சி வென்றுள் ளது. அடுத்த 2 தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
செய்யாறு மற்றும் கலசப் பாக்கம் தொகுதிகளை தொடர்ந்து, 3 தேர்தல்களிலும் கூட்டணி கட்சி களுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் அதிருப்தியில் உள்ள திமுக வினர், வரக்கூடிய தேர்தலில் ‘மீண்டும் திமுக’ போட்டியிட வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறும் போது, “திமுக எதிர்கொண்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதி களில் வென்றது. அதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியும் அடங்கும். அன்று முதல் இன்று வரை திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் சூழல் இருந்தபோதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிரொலித்த ‘உள்ளூர் அரசியலின் சதுரங்க விளையாட்டால்’ ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில், திருவண்ணாமலை மாவட்டமும் இடம் பெற்றுவிட்டது. வெற்றி வாய்ப் புள்ள செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன் பயனை அனுபவித்து வருகிறோம்.
இந்த இரு தொகுதிகளையும் தொடர்ந்து 3 முறை (2006, 2011, 2016) கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு மீண்டும் ஒதுக்கினால், ஆபத்தில் முடிந்துவிடும். எனவே, வரக்கூடிய தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும்.
இது தொடர்பான எங்களது விருப்பத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். அவர், நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் உதிக்கட்டும்” என்றனர்.
இவர்களது விருப்பம் நிறைவேறினால், செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.