தமிழகம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான திமுக புகார் மீது லோக் ஆயுக்தா விசாரணை: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

செய்திப்பிரிவு

தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான திமுக புகாரை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு புகார் அளித்திருந்தார்.

அதேபோல, கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்தார்.

இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களைப் பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்.

அதேபோல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

உணவுத்துறை அமைச்சர் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலாளர் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்குகளில், பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT