தமிழகத்தில் பெருமழையால் அழுகிய பயிர்களுக்கான மாவட்ட வாரியான பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விகளும் அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:
கீழ்காணும் கேள்விகளுக்கு, வேளாண் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
* அண்மையில் பெய்த பெருமழையால், தமிழ்நாட்டின் காவிரிப்படுகை வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியதால், உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து, அரசுக்குத் தெரியுமா?
* அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;
* இதுகுறித்த விவரங்களைச் சேகரிக்க, ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா?
* உழவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்பை ஈடு கட்ட, ஏதேனும் உதவிகள் அல்லது பயிர்க் காப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படுமா?
* அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;
* இல்லை என்றால், அதற்கான காரணம் தருக?
எனக்கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவரது பதில் வருமாறு:
அண்மையில் பெய்த பெருமழையில், வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியது குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு சேகரித்து அனுப்பி இருக்கின்றது.
தஞ்சாவூர் : 1,06,997.26 ஹெக்டேர்
திருவாரூர் : 50,151.00 ஹெக்டேர்
திருச்சி : 10,821.00 ஹெக்டேர்
நாகப்பட்டினம் : 20,580.40 ஹெக்டேர்
மயிலாடுதுறை : 16,351.90 ஹெக்டேர்
கடலூர் : 45,621.00 ஹெக்டேர்
புதுக்கோட்டை : 43,976.00 ஹெக்டேர்
அரியலூர் : 25,060.34 ஹெக்டேர்
கரூர் : 3,780.11 ஹெக்டேர்
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியல் இடப்பட்டுள்ள பயிர்களுக்கு, பயிர் அறுவடை சோதனையின் (Crop Cutting Experiment) அடிப்படையில், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்”.
இவ்வாறு, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விளக்கம் அளித்து இருக்கின்றார்.