தமிழகம்

நெல்லையில் 2-ம் தவணை கரோனா தடுப்பூசி வழங்கல்

அ.அருள்தாசன்

திருநெல்வேலியில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான 2-ம் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 2 மற்றும் 8-ம் தேதிகளில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 8 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 16-ம் தேதி தற்போது தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட தொற்றா நோய் உள்ளவர்களுக்கும், 4-ம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தலா 100 சுகாதார பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு 15100 டோஸ்கள் கரோனா தடுப்பூசி மற்றும் 66000 ஏடி சிரிஞ்சுகள் வரப்பெற்றுள்ளன.

மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது தவணையாக தடுப்பூசி இன்று போடப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT