திமுக ஆட்சியில் தீட்டப்பட்டத் திட்டங்களுக்கும் சேர்த்து உரிமை கோரி பொய்ப் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டுவருவதாக உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான உதயசூரியன் வரவேற்றார்.
ரிஷிவந்தியம் சட்டபேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான வசந்தம் கார்த்திக்கேயன் நிகழ்ச்சிக்கு குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் பொதுமக்கள் அளித்து மனுக்கள் குறித்து கேட்டறிந்த திமுக ஸ்டாலின், அங்கு பேசியதாவது, முதல்வர் பழனிச்சாமி விளம்பரங்கள் பல்வேறு சாதனை செய்துள்ளதாக தெரிவித்து வருகிறார். ஆனால் அவை திமுக ஆட்சியில் தீட்டப்பட்டத் திட்டங்கள். அத்திக்கடவு அவினாசி திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்ட்டது.
மூதாதையர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், குடிமராமத்துப் பணி, சென்னை மெட்ரோ ரயில், காவிரி ஆணையம் அனைத்தும் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கும் சேர்த்து உரிமை கொண்டாடுகிறார் பழனிசாமி.
இவர்களது ஆட்சியில் எந்த திட்டமும் தீட்டப்படவில்லை.கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது என்கிறார்.அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாகத் தானே போடப்பட்டு வந்தது. டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முன்வராதது ஏன்.தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி மின்மிகை மாநிலம் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
சொல்லப்போனால் அதிமுகவிற்கு சாதனை என்று சொல்ல எதுவுமில்லை. சாதனை என்று கூறும் விளம்பரங்கள் அனைத்தும் வேதனை விளம்பரங்களே. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமின்றி, இருந்த வேலை வாய்ப்புகளையும் ஏராளமானோர் இழந்துள்ளனர்.
தமிழகம் வெற்றி நடை போடுவதாக அவர் அளிக்கும் விளம்பரம், வெற்றி நடை அல்ல, வெற்று நடையே, விரைவில் திமுக ஆட்சியில் கெத்து நடைபோடும் ஆட்சி அமையும் என்றார்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் அவருக்கு செங்கோல் வழங்கும் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன்.