தமிழகம்

டிடிவி தினகரன் குறித்து நான் பேசும்போது குலத்தொழில் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ந.முருகவேல்

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்து நேற்று தான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினர்.

மேலும், அவ்வாறு தான் கூறியது தவறாகக் கருதியிருந்தால் அதற்காகதான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் திருக்கோயிலூரில் தெரிவித்தார்.

அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சிக்காக திருக்கோயிலூர் வந்திருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தினகரன் குறித்து கருத்து தெரிவிக்கையில், அவரது குலத்தொழில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

ஆனால் அதற்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. குலத் தொழில் என்று சொன்னது அவரது குடும்பத் தொழில். எங்கள் பகுதியில் அவ்வாறு தான் கூறுவோம். அந்த அர்தத்தில்தான் நான் சொன்னேன்.

ஆனால் அதை திரித்து ஏதோ ஒரு சமுதாயத்துக்கு எதிராக கருத்துக் கூறியதாக அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். எனக்கும், டிடிவி தினகரனுக்கு சில அரசியல் பிரச்சினைகள் இருக்கும்.

கருத்து சொல்லும் போதும், நையாண்டி கேலி செய்யும் போது, நேரிடையாகக் கருத்து சொல்லி வருகிறோம். அது எந்த நிலையிலும் எந்த சூழலிலும் யாரையும் எப்போதும், மன வருத்தப்படும்படியாக நான் பேசுவது கிடையாது. அந்த எண்ணமும் எனக்கில்லை.

இன்னும் சொல்லப்போனால் நான் 10 ஆண்டு காலம் மதுரையில் படித்தவன், எனக்கு அதிகப்படியான நண்பர்கள் இருப்பது மதுரையில் தான்.

நான் கூறியதை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், நான் அதற்காக மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அர்தத்தில் சொல்லவில்லை, அந்த குடும்பம் குறித்துத் தான் பேசினேன்" என்றார்.

SCROLL FOR NEXT