தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முதல்வர் பழனிசாமிக்கு வெண்கலச் சிலைகள் பரிசளிக்க காத்திருந்த விவசாயிகள். 
தமிழகம்

முதல்வர் பழனிசாமிக்கு பரிசாக எம்ஜிஆரின் வெண்கலச் சிலை

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கோடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாணிக்கம், வீரப்பன். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம், கும்பார அள்ளி பகுதியில் முதல்வரை வரவேற்கக் காத்திருந்த கூட்டத்தில் தட்டு ஒன்றில் சிலைகளை வைத்தபடி காத்திருந்தனர்.

கூட்டத்தில் முண்டியடித்தபடி முதல்வரை நெருங்கி விவசாயிகள் இருவரும் தங்கள் பரிசைக் கொடுத்தபோது மலர்ந்த முகத்துடன் அவற்றை பெற்றுக் கொண்ட முதல்வர், ‘ரொம்ப சந்தோஷம்’ என்றுக் கூறி அவர்களது தோளைத் தட்டி அனுப்பினார்.

முதல்வருக்கு பரிசளித்த உற்சாகத்தில் இருந்த அவர்களிடம் பேசியபோது, ‘‘பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘விவசாயி’ திரைப்படத்தில் தோன்றுவதைப்போல ஏர்க்கலப்பை மற்றும் உழவு மாடுகளுடன் நிற்கும் எம்ஜிஆரின் வெண்கலச் சிலையை முதல்வருக்கு பரிசளித்தோம், அத்துடன், அம்மன் சிலைஒன்றையும் அளித்துள்ளோம். இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்றாலும், அரசு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்ததில் மகிழ்ச்சி’’ என்றனர்.

SCROLL FOR NEXT