தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேட்டியளித்த நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா. அருகில் துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்டோர். படம்: த.சத்தியசீலன். 
தமிழகம்

விவசாயத்துக்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்க முடிவு: நபார்டு வங்கித் தலைவர் தகவல்

த.சத்தியசீலன்

2021- 22 ஆம் ஆண்டு விவசாயத்திற்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நபார்டு வங்கித் தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் பொருளாதாரச் சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்தார். வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஆர்.அசோக் வரவேற்றார். நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள், சந்தை வழி மேலாண்மை, உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு, மலைத் தோட்டப் பயிர்களின் வேளாண் வணிகம் மற்றும் சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதில் பொருளாதார அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கரோனா பெருந்தொற்று காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளும் இதே பிரச்சினையைச் சந்தித்துள்ளன. இருந்த போதிலும், இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படவில்லை.

உற்பத்தி மற்றும் விநியோகம் சிறப்பாக இருந்தது. சொல்லப்போனால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு உள்கட்டமைப்பு, கடன் வசதி, உற்பத்தி அவசியம். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, இதில் ரூ.12 லட்சம் கோடியை வழங்கி விட்டது. 2021-22-ம் ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 86 சதவீதம் சிறு, குறு விவசாயிகள் இருந்த போதிலும், விவசாயம் செய்வதற்கு அவர்களுக்குப் போதுமான அளவு பொருளாதார வசதி இருக்காது. இதற்காக 4,600 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தனியார் வட்டி, உற்பத்திச் செலவு குறையும். வறுமையில் இருந்து விவசாயிகள் விடுபட முடியும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறும் கடனை விவசாயிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு நபார்டு கைகொடுக்கும்’’.

இவ்வாறு ஜி.ஆர்.சின்தாலா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT