மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ல் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.
இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை. அபராத தொகையை சுதாகரன் செலுத்திவிட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக கையகப்படுத்தி வருகிறது.
நேற்று (பிப். 08) காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான மேலும் சில சொத்துகள் கையகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தஞ்சை வ.உ.சி. நகர் முதல் தெருவில் உள்ள 26 ஆயிரத்து 540 சதுர அடி காலி மனையை தமிழக அரசு இன்று (பிப். 09) காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி குறிப்பு மூலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.