தமிழகம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு- உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.

நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்த விஷ்ணுபிரியா, அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது தோழி கூறினார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதில், ‘எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

வாதம் முடிவடைந்தது

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி நேற்று ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT