சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயசிம்ம பாபு சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
கர்நாடகத்தை சேர்ந்த நீதிபதி ஜெயசிம்ம பாபு, அங்கிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2004-ம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர், பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தின் உறுப்பினராக பணியாற்றிவந்த அவர், வழக்குகளை விசாரிப்பதற்காக நேற்று வந்திருந்தார்.
காலை 11.45 மணி அளவில் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அவரது மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சமரச தீர்வு மைய அதிகாரிகள் கூறினர்.