சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,752 கோடியில் காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தை கானொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் காவிரி கூட்டுத் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சில பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. மற்ற பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 2013-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.1,752.73 கோடியில் செயல்படுத்த முதல்வர் பழனிசாமி இன்று கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லதா, குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் குணசேகரன், செயற்பொறியாளர்கள் அயினான், தங்கரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும். இத்திட்டத்திற்கு நபார்டு வங்கி ரூ.1,537.59 கோடி நிதியுதவி அளிக்கிறது.
மாநில அரசு பங்காக ரூ.215.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி 4 கட்டங்களாக நடக்க உள்ளது.
இத்திட்டத்திற்காக கரூர் மாவட்டம் குளித்தலை, தண்ணீர்ப்பள்ளி, மருதூர், பேட்டவாய்த்தலை, குமாரப்பாளையம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் ஆழ்த்துளை கிணறுகளும், மருதூரில் 43.85 லட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், பாதிரிப்பட்டியில் 43.85 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள தரைமட்ட தொட்டியும், தென்னம்மாள்பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டியும் அமைக்கப்படுகின்றன.
இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் 381 தரைமட்ட தொட்டிகள், 768 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகின்றன. 4,282.82 கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
இதன்மூலம் 11.39 லட்சம் மக்களுக்கு தினமும் 49.83 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. மேலும் எதிர்காலத்தில் 2036-ம் ஆண்டில் 13.56 லட்சம் பேருக்கு 69.52 மில்லியன் லிட்டரும், 2051-ம் ஆண்டில் 16.11 லட்சம் பேருக்கு 86.42 மில்லியன் லிட்டரும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.