மீனவர்களின் விசைப்படகுடன் மோதியதில் சேதமடைந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் | கோப்புப் படம். 
தமிழகம்

தமிழக மீனவர்கள் கொலை சம்பவத்தில் இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா?- மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது, கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 1500 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 100 மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறையில் உள்ளனர்.

கேரள எல்லையில் இரு மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக இத்தாலிய கப்பல் மாலுமிகள் இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஜன. 18-ல் தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொலை செய்தது.

இந்த மீனவர்களைக் கொலை செய்த இலங்கைக் கடற்படை வீரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், 4 மீனவர்களின் குடும்பத்துக்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT