சென்னையில் நேற்று ஒருநாள் பெய்த கனமழைக்கே மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வீட்டு சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பலியானது. நிவாரணப் பணிகளில் 4 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்தது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்த தால், நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடியவிடிய பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக் கிறது. கீழ்ப்பாக்கம், புரசைவாக் கம், பெரம்பூர், பட்டாளம், ஓட்டேரி, வியாசர்பாடி, கொடுங் கையூர், திருவொற்றியூர், மாதவ ரம், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, தியாகராய நகர், அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, வேளச் சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வியாசர்பாடி சுரங்கப்பாதை யில் தேங்கியுள்ள மழை நீரில் 2 மாநகர பஸ்கள் சிக்கிக் கொண் டன. அவ்வழியில் போக்குவரத்து தடைபட்டதால், மாற்றுப் பாதை யில் வாகனங்கள் இயக்கப்பட்டன. மூலக்கடை சந்திப்பில் தேங்கி நின்ற மழை நீரால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடுங்கையூர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எம்கேபி நகர் பேருந்து நிலை யத்தை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசியது.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், சென்னை மற்றும் புறநகர்களின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
நகரில் 133-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதாக மாநகராட்சி உதவி மையத்துக்கு புகார்கள் வந்துள் ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வியாசர்பாடி, புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், கிண்டி, அசோக்நகர் உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 16 சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரை 350 டீசல் பம்புகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். நிவாரணப் பணிகளில் 4 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெரியகுப்பம் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய 2 குடும்பங்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
அடையாறு, கோட்டூர்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகளை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தை பலி
சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள பனையூர் வேலு நாயக்கன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டருகில் உள்ள காம்பவுண்ட் சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில், விஜயகுமாரின் 2 வயது மகள் பவித்ரா இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாள்.
சென்னையில் பெய்த பலத்த மழையினால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ம.பிரபு