தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கோவில்கள், சாலையோரங்களில் வீடற்ற ஆதரவற்ற பலர் வாழ்கின்றனர்.
இவர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் முதுமை மற்றும் நோய்கள் காரணமாக தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆதரவற்றவர்களுக்கு சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஆதரவற்றோர், கைவிடப்பட்டோருக்கான மறுவாழ்வு வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.
பின்னர், தமிழக சுகாதாரத்துறை செயலர், சமூக நலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.