விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு, மாநில அரசு பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறன.
அதனடிப்படையில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டு.
தற்போது, 2-ம் கட்டமாக அரசு அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களசுப்பிரமணியன் முதல் நபராக பங்கேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 200 பேருக்கு இத்தடுப்பூசி போடப்படுகிறது.
சுமார் 2 ஆயிரம் பேருக்கு இம்முகாமில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் 25 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.