தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்தும், விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையிலிருந்தும் நாளை (நவ.4) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் 4.11.2015 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;
அதேபோல் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோமுகி அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு 4.11.2015 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.