தமிழகம்

சிவகங்கையில் 2-வது நாளாக சசிகலா ஆதரவு அலை: அமைச்சர் தொகுதியிலேயே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

இ.ஜெகநாதன்

கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் தொகுதியான சிவகங்கையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து, சசிகலா ஜன.27-ம் தேதி விடுதலையானார். மேலும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இதற்கிடையில் அதிமுக, அமமுக இணையும் என்றும், அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொகுதியான சிவகங்கையில் ‘சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ’ என குறிப்பிட்டு அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் செல்வகணபதி என்பவர் போஸ்டரை ஒட்டியுள்ளார்.

ஏற்கெனவே தேவகோட்டையில் சசிகலாவை ஆதரித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியநிலையில் தற்போது சிவகங்கையிலும் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிவகங்கை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப் போவதாக பேச்சு எழுந்து வரும்நிலையில், தற்போது சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது அமைச்சர் பாஸ்கரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT