சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரேஷன்கடையில் தரமற்ற ரேஷன்அரிசி விநியோகித்து வருவதால் கார்டுதாரர்கள் வாங்க மறுத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 3.93 லட்சம் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து தற்போது வரை சிவகங்கை மாவட்டம் முழுதும் தரமற்ற ரேஷன் அரிசியே வழங்கப்படுகிறது. பழுப்பு நிறத்துடன், துர்நாற்றமும் வீசுகிறது. சில சமயங்களில் புழு, வண்டுகளும் காணப்படுகின்றன.
இதனால் கார்டுதாரர்கள் அரிசியை சமைத்து உண்ண முடியாமல் கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, வலனை கிராமத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரிடம் தரமற்ற அரிசியை காட்டி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதன்பிறகும் ரேஷன்கடைகளில் அதே தரமற்ற அரிசி தான் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் காரைக்குடி ஆலங்குடியார் வீதி ரேஷன்கடையில் வழங்கப்பட்டு வரும் ரேஷன்அரிசி தரமற்று மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து கார்டுதாரர்கள் அரிசியை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காரைக்குடி சமூக ஆர்வலர் கணேசன் கூறியதாவது:,”கரோனாவால் பலரும் வேலைவாய்ப்பின்றி, கடைகளில் அரிசி வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பெரும்பாலானோர் ரேஷன் அரிசியை தான் வாங்கி சமைக்கின்றனர். ஆனால் அவற்றை தரமற்று வழங்குவது தான் வேதனையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்டுதாரர்களுக்கு தரமான அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.