ஆடு, கோழிகளைக் கொன்று வந்த சிறுத்தையை கோவை மதுக்கரை அருகே வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட ஐயப்பன் கோயில் தெரு, விநாயகர் கோயில் தெரு, அய்யம்பதி, தமிழண்ணை தெரு, காந்தி நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஒரு சிறுத்தை அடிக்கடி வந்து கோழிகள், ஆடுகளைக் கொன்று வந்தது. எனவே, அந்தச் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க தலைமை வன உயிரினக் காப்பாளரிடமிருந்து அனுமதி பெறப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஆய்வறிக்கையின்படி, சிறுத்தை நுழைந்த இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி காந்தி நகர் மற்றும் மட்டப்பாறையில் நான்கு ஆடுகளைச் சிறுத்தை கொன்றது. உடனடியாக மட்டப்பாறை பகுதியில் கடந்த 21-ம் தேதி ஒரு கூண்டு வைக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, காந்தி நகர் பகுதியில் மற்றொரு கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகரில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. வனக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தெங்குமரஹடா வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிறுத்தை அங்கு விடுவிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.