தேவிநாயக்கன்பட்டியில் நடந்த விழாவில் நிலாப் பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்ட சிறுமியைக் கோயிலுக்கு அழைத்து வந்த கிராமத்துப் பெண்கள்.   
தமிழகம்

சிறுமியை நிலாப் பெண்ணாகத் தேர்வு செய்து வழிபாடு: வேடசந்தூர் அருகே கிராமத்தில் பாரம்பரிய விழா 

பி.டி.ரவிச்சந்திரன்

சிறுமி ஒருவரை நிலாப் பெண்ணாகத் தேர்வு செய்து பெண்கள் மட்டும் வழிபாடு நடத்தும் பாரம்பரிய விழா வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ளது தேவிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி இரவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிலாப் பெண் வழிபாடு நடைபெறுகிறது. ஒரு வாரத்திற்கு முன்னதாக ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிக் குலுக்கல் முறையில் நிலாப் பெண்ணைத் தேர்வு செய்கின்றனர்.

தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு அந்த கிராமத்தில் உள்ள பலரும் தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவு வகைகளைக் கோயிலில் வைத்து வழங்குகின்றனர். இந்த ஆண்டிற்கான நிலாப் பெண் வழிபாடு நேற்று இரவு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. முன்னதாக நிலாப் பெண்ணாக ரமேஷ் - நவமணி ஆகியோரின் மகள் கனிஷ்கா (10) தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அவருக்குப் புத்தாடை அணிவித்து, ஆவாரம் பூ மாலையிட்டு, ஊர்ப் பெண்கள் அலங்கரித்தனர். சிறுமியிடம் ஆவாரம்பூக்கள் நிரம்பிய கூடையைக் கொடுத்து தேவிநாயக்கன்பட்டியில் உள்ள மாசடைச்சி அம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயில் வளாகத்தில் சிறுமியை அமரவைத்து இரவு முழுவதும் கும்மியடித்தும், நிலாப் பாடல்கள் பாடியும் வழிபட்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்துச் சிறுமிக்கு வழங்கினர்.

விடிவதற்கு முன் ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலையில் சிறுமியைத் தீபம் ஏற்றச்செய்து வழிபட்டனர். வழிபாட்டை முடித்துவிட்டு பவுர்ணமி நிலவு மறைவதற்குள், சூரிய உதயத்திற்கு முன்னர் கிராமப் பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்த விழா குறித்துக் கிராமத்துப் பெண்கள் கூறுகையில், ''நிலாப்பெண் வழிபாடு எனும் விழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. எங்கள் முன்னோர் வழிகாட்டியபடி பாரம்பரிய பழக்க வழக்கத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து விழாவைக் கொண்டாடி வருகிறோம். கிராம மக்கள் உடல் நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் இந்த நிலாப்பெண் வழிபாடு நடத்தப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT