தமிழகம்

புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலர்வது உறுதி; நாராயணசாமியால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது: நமச்சிவாயம் பேட்டி

செ.ஞானபிரகாஷ்

நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது என்று பாஜகவில் இணைந்த பிறகு நமச்சிவாயம் சாடியுள்ளார். 2021-ல் பாஜக ஆட்சி புதுச்சேரியில் உறுதி என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சிப் பூசலால் அங்கிருந்து விலகி டெல்லியில் இன்று நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.

அதன் பிறகு நமச்சிவாயம் கூறுகையில், "வளமான புதுச்சேரிதான் எண்ணம். அதற்காக பாஜகவில் இணைந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை மோடி உருவாக்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். மோடி தலைமையில் இந்தியா ஒளிர்கிறது.

அதுபோல் புதுச்சேரியும் ஒளிரவேண்டும் என்பதே நோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் இம்முடிவு எடுத்துள்ளோம்.

நிச்சயமாக புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கொண்டுவர பாடுபடுவோம். மக்கள் தயாராக உள்ளனர். 2021-ல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகலாகப் பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT