தமிழகம்

வேதா இல்லம் திறப்பு; தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு: தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கிறது

செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றப்பட்ட வேதா நிலைய பிரதான கட்டிடத்திற்குள் செல்ல அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்கிற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு நாளை (ஜன.29) விசாரிக்கிறது.

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கி, அதை நினைவில்லமாக மாற்றியுள்ளது. அதன் திறப்புவிழா இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு 69 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நேற்று விசாரித்த தனி நீதிபதி என்.சேஷசாயி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதில், நினைவில்லம் திறப்பு விழாவை நடத்த அனுமதி அளித்து, இதற்காக அப்பகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவிட்ட அவர், அதேசமயம் வேதா நிலைய வளாகத்தின் நுழைவு வாயிலை திறந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்றாலும் வேதா நிலைய பிரதான கட்டிடத்தை திறக்க கூடாது, ஜெயலலிதாவின் உடமைகள் முறையாக கணக்கெடுக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க கூடாது, நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாவியை தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

வேதா நிலைய பிரதான கட்டிடத்தில் அனுமதிக்காதது உள்ளிட்ட இரண்டாம் பகுதி உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் காணொலி மூலமாக ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

அதை விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும், அதேசமயம் மேல்முறையீடு வழக்கை வெள்ளிக்கிழமை ((ஜனவரி 29ல்)) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT