தமிழகம்

கிராமசபை கூட்டம் நடத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கலாம். ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:

டெல்லியில் குடியரசு தினத்தில் பொதுவாக ராணுவ வீரர்கள்தான் அணிவகுப்பார்கள். நிகழாண்டு அவ்வாறு அணிவகுப்பு நடப்பது ஒருபுறம் இருந்தாலும், டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர்.

வாழ்வாதாரத்தை நசுக்கும் அளவுக்கு உள்ள மத்திய அரசின் 3 சட்டங்களை ரத்து செய்யக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடுகின்றனர்.

மக்களை மதிக்கும் அரசு மத்தியில் அமைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திரையரங்குகளை திறக்கலாம். ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சியினர் மக்களை சந்திக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் கட்டளையை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்றார்.

SCROLL FOR NEXT