தமிழகம்

குடியரசு தினம்: உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேசியக் கொடி ஏற்றினார்

செய்திப்பிரிவு

72-வது குடியரசு தினத்தையொட்டி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர், காவல் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவிய நாளாம் குடியரசு தின விழாவில் நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதில் அங்கம் வகிக்கும் ஒரு தூணாம் உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்வு நடந்தது.

72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் சிஐஎஸ்எஃப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், உயர் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நீதித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வழக்கமாக நடைபெறும் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சாகச நிகழ்ச்சி கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படவில்லை.

SCROLL FOR NEXT