தூத்துக்குடி அருகே மேலத்தட்டப்பாறையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள். 
தமிழகம்

தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி போட்டி: அமைச்சர் வண்டிக்கு முதல் பரிசு

செய்திப்பிரிவு

வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாள் மற்றும் திருமலை நாயக்கரின் 438-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே மேலத்தட்டப்பாறை கிராமத்தில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

நடுத்தர மாட்டு வண்டி போட்டிக்கு 8 மைல் தொலைவும், சிறிய மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தொலைவும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடுத்தர மாட்டு வண்டி போட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டு வண்டி முதல் பரிசை வென்றது. 2-ம் பரிசை திருநெல்வேலி மாவட்டம் வேலங்குளத்தைச் சேர்ந்த எம்.கண்ணன் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு வண்டியும் வென்றன.

சிறிய மாட்டு வண்டி போட்டியிலும் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வண்டி முதல் பரிசை வென்றது. 2-ம் பரிசை வேலங்குளம் கண்ணன் மற்றும் மீனாட்சிபுரம் கவுசிக் கார்த்திக் ஆகியோரது காளைகள் பூட்டப்பட்ட வண்டியும், 3-ம் பரிசை கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி ஆர்.பொன்னரசு, வீர விளையாட்டு கழக மாவட்டச் செயலாளர் பி.விஜயகுமார், வீரசக்கதேவி ஆலயக்குழு இணைச் செயலாளர் சண்முக மல்லுச்சாமி, தட்டப்பாறை விநாயகம் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT