சிதம்பரம்- திருச்சி தேசிய சாலை யில் பல இடங்களில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் இருந்து கும ராட்சி, காட்டுமன்னார்கோவில் வழியாக திருச்சி தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்,வேன் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. சுமார் 60 கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பலர் இருசக்கர வாகனத்தில் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை 25 கி.மீ தூரத்தில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளன.. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இரவில் பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வது கிடையாது என்கின்றனர் இப்பகுதி மக்கள். பெரும் அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்குள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.