புதுச்சேரியில் இன்று புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜன.23) கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,296 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 16 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 17 பேருக்கும் என மொத்தம் 36 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரத்து 830 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 107 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 195 பேரும் என மொத்தம் 302 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 884 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 53 ஆயிரத்து 893 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 503 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.