வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் நேற்று கூறியிருப்பதாவது:
மண்டல் ஆணையத்தால் முற்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கப்பட்ட மராத்தா சாதியினர், தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 21 இடங்களில் பேரணி நடத்தினர். அதையேற்று அவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மராத்தாசமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம், ஒரே நாளில் (2018-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி) மராட்டிய சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மராத்தா இட ஒதுக்கீடு செல்லும் எனமும்பை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்ட சமூகத்துக்கே மராட்டியத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.