தமிழகம்

பிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்- மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி

அ.அருள்தாசன்

சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

மேலும், நெல்லையில் பாஜக போட்டியிடும் என்றும் சூசகமாக அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெற்ற சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 18-ம் தேதி முதல் வரும் 25-ம் தேதி வரை பூத் கமிட்டி பலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம். பூத் கமிட்டி பலப்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவு பெற்றுள்ளது.

மேலும் 100 நாட்களில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வரும் 31-ஆம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி.நட்டா மதுரை வருகிறார்.

அங்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து கட்சியின் பல்வேறு அணிகளின் மாநாடு நடைபெறுகிறது. சேலத்தில் வரும் 6-ம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். அதேபோல் வரும் பிப்ரவரி 14 ராமேஸ்வரத்தில் மகளிரணி மாநாடு நடைபெறுகிறது.

நெல்லை தொகுதியில் பாஜக போட்டி:

முன்னதாக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முருகன் பேசும்போது, "திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று சூசகமாக தெரிவித்தார். நாம் போகும் தூரம் அதிகம். நாம் இலக்கை அடைய இருக்கும் நாட்கள் குறைவு. திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இத் தொகுதியில் வெற்றிபெற்று நமது உறுப்பினர் சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT