புதுச்சேரியில் இன்று புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜன 22) கூறும்போது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,342 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 8 பேருக்கும் என மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் உயிரிழப்பு எதுவுமில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரத்து 794 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் என மொத்தம் 294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 857 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரத்து 551 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 218 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.