மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் இன்று (21-ம் தேதி) ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பச்சைக்கொடி பேரணி நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள சி.நாராயணசாமிநாயுடு சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மாமன்னன் ராஜராஜசோழன் சிலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியை மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி துவக்கி வைத்தார்.
பேரணியில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், பொருளாளர் மணிமொழியன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க டெல்டா ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகசீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் விவசாயிகளும், பெண்களும் பச்சைக்கொடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியில், விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.