சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், ஜாமீன் கோரும் கணவர் ஹேம்நாத்தின் மனுவில் அவருக்கு எதிராக சாட்சியளிக்க அவரது நண்பர் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து, ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
சித்ரா தற்கொலையில் தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கணவர் ஹேம்நாத் ஜாமீன் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் பட்டுச் சேலையில் தூக்குப் போட்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடமோ அவரின் கழுத்தில் இல்லை என அவரது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பினார்.
தற்கொலைதான் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதிலளிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கில் இடையீட்டு மனுதாரராக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.