பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் இன்று திமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தில் பருப்பு விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.200-ஐ தாண்டியுள்ளது. தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் பருப்பு விலையைக் குறைத்திருக்க முடியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடைசி நேரத்தில் 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்து கிலோ ரூ. 110-க்கு விற்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு நாடகமாகும்.
‘நமக்கு நாமே’ பயணத்தின்போது விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். விலைவாசி உயர்வால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. முதல்வர் ஜெயலலிதா கோட நாட்டிலிருந்து உடனடியாக சென்னை திரும்பி விலைவாசி உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.