தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய அக்டோபர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிகிறது.

2016 ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1998 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தங்கள் செய்ய படிவம் 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்ற படிவம் 8 ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அளிக்கலாம். திருத்தங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001-ஐ பூர்த்தி செய்து ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதளம் (www.elections.tn.gov.in) அல்லது EASY என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்ததும், புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT