கரோனா பரவலைத் தடுக்க அரசியல் கட்சியினர் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் அதிகக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அரசியல் கட்சிகள் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதை கட்டப்படுத்தக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அரசியல் கட்சியினர் பேரணி, கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அமர்வு, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு போதிய கவனம் செலுத்தி வருகிறது. எனவே இதில் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கத்தேவையில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்தது.