தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் 14 அரசு சட்டக் கல்லூரிகள், 2 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. அரசு சட்டக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனி அடையாள அட்டை, ரகசியக் குறியீட்டு எண் வழங்க வேண்டும்.
மின்னிதழ், சட்ட இதழ்கள், நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சட்டக் கல்லூரி வளாகங்களில் வைஃபை வசதி, நவீன மின்னணு நூலகம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் தேசிய சட்டக் கல்லூரிகளில் இருப்பது போன்ற அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி கே.கே.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.