அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே விவசாயம் காக்க வலியுறுத்தி வயலில் கரகாட்டம் ஆடியபடி மாற்றுத் திறன் மாணவி நாற்று நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடையார்பாளையம் அருகே உள்ள பெரியதிருக் கோணம் கிராமத்தைச் சேர்ந்த வர் பாண்டியன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி மாலா. காதுகேளாதோர் தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கிருஷ்ணவேணி(15). வாய்பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறன் மாணவியான இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள காதுகேளாதோர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், விவசாயத்தை காக்க வேண்டும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நேற்று நாற்று நடும் பணியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே மாணவி கிருஷ்ணவேணி நாற்று நட்டதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மாணவியின் தாய் மாலா கூறும்போது, ‘‘விவசாயத்தை காக்கவும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கவும் வலியுறுத்தி கிருஷ்ணவேணி நாற்று நடும் பணியை மேற்கொண்டார். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.