சிவகங்கை அரண்மனைவாசலில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தமிழகம்

பொங்கல் சமயத்தில் முக்கியச் சாலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: சிவகங்கையில் வியாபாரிகள், மக்கள் அதிருப்தி

இ.ஜெகநாதன்

பொங்கல் சமயத்தில் சிவகங்கையின் முக்கியச் சாலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழர்களின் முக்கியப் பண்டிகையாக பொங்கல் உள்ளது. இதையடுத்துப் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், சிவகங்கை அரண்மனைவாசலில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்குப் பல்லாயிரம் பேர் வந்து செல்வது வழக்கம். இதற்காக அரண்மனைவாசலில் உள்ள சாலைகளில் கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை விற்க வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிகக் கடைகளை அமைப்பர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று அரண்மனைவாசலில் முதல்வரை அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக சாலையோரத்தில் வியாபாரம் செய்த வியாபாரிகள், விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர். மேலும், பொங்கல் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். கரும்பு, மஞ்சள் கொத்து போன்ற பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

பொங்கல் சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு வேறு இடத்தை ஒதுக்காமல் அரண்மனைவாசலை ஒதுக்கிய போலீஸார் மீது வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT