ப.வெ.தாமோதரன் 
தமிழகம்

முன்னாள் அமைச்சர் தாமோதரன் மறைவு: ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி இரங்கல்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தைச் சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன் (71). 2001 முதல் 2006 வரை பொங்கலூர் பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார். அப்போது, கால்நடைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஆவின் தலைவராக பொறுப்பு வகித்தார். கரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த மாதம் 15-ம் தேதி கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று குணமடைந்த நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புக்காக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்துவந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். மறைந்த தாமோதரனுக்கு விஜயம் என்ற மனைவி, கவிதா, ராதிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது ஒரே மகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ப.வெ.தாமோதரன் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT