தமிழகம்

சிறுமி, கர்ப்பணி கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை கைதிகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கி.மகாராஜன்

தேனி கர்ப்பிணி கொலை, புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரும் மனு தொடர்பாக தூக்கு தண்டனை கைதிகள் இருவரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனி சின்னமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவள்ளி (19). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கற்பகவள்ளி 3-வதாக கர்ப்பம் தரித்திருந்தார்.

நடத்தையில் சந்தேகப்பட்டு கற்பகவள்ளியை 2015 ஜூன் 21-ல் சுரேஷ் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். முன்னதாக வயிற்றில் தாக்கியதில் கற்பகவள்ளி வயிற்றில் இருந்த கரு கலைந்தது. இந்த வழக்கில் சுரேஷூக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் டிச. 15-ல் தீர்ப்பளித்தது.

சிறுமி கொலை

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி, கடந்த ஜூன் 30-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏம்பல் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா என்ற சாமிவேல் (27) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ராஜா என்ற சாமிவேலுக்கு 3 தூக்கு தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் டிச.30-ல் தீர்ப்பளித்தது.
கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கினால் அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகே நிறைவேற்ற முடியும்.

அதன்படி சுரேஷ், ராஜா என்ற சாமிவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தூக்கு தண்டனை கைதிகளான சுரேஷ், ராஜா என்ற சாமிவேல் இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT